ஸ்டாக்ஹோம்: துருக்கி அதிபரின் உருவ பொம்மையை ஸ்வீடனில் தொங்கவிட்ட விவகாரத்தில் குறிப்பிட்ட மத நூலை எரிப்பதற்கு ஸ்வீடன் அரசு அனுமதி அளித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள துருக்கிய தூதரகம் அருகே, துருக்கி அதிபர் தையிப் எர்டோகனின் உருவ பொம்மையை சிலர் தலைகீழாக தொங்கவிட்டனர். கருத்து சுதந்திரம் குறித்து இருநாடுகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிபரின் உருவ பொம்மையை தொங்கவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் துருக்கியிலும் போராட்டங்கள் நடந்தன.
இந்நிலையில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த வலதுசாரித் தலைவர் ராஸ்மஸ் பலுடான் (41) என்பவர், ஸ்டாக்ஹோமில் உள்ள துருக்கிய தூதரகத்திற்கு வெளியே குறிப்பிட்ட மதத்தின் நூல் நகலை எரிப்பதற்கு, ஸ்வீடன் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த விவகாரம் உலகளவில் குறிப்பிட்ட மதத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஸ்வீடன் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ‘உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து நோட்டோ உறுப்பு நாடுகளின் பட்டியலில் தங்களையும் சேர்க்க ஸ்வீடன் போராடி வருகிறது. இதற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இருநாடுகளுக்கும் இடையே அரசியல் ரீதியான மோதல்கள் அதிகரித்துள்ளன’ என்று தெரிவிக்கின்றன.