கோவை: கோவையில் தனியார் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் கொரோனா நோயாளியின் உறவினர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடந்த மாதம் 24ம் தேதி சிந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆரிச்சாமி சிகிச்சை பலன் தராமல் அடுத்த 4 நாட்களில் இறந்துவிட்டார். ஒரு மாதத்திற்கு பிறகு நேற்று மருத்துவமனைக்கு வந்த ஆரிச்சாமியின் உறவினர்கள், கொரோனா சிகிச்சை விவரம் மற்றும் கட்டணத்திற்கான ரசீது கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது மருத்துவமனை ஊழியர்களும், ஆரிச்சாமியின் உறவினர்களும் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்ட சி.சி.டி.வி. காட்சியை வைத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.இந்நிலையில், கொரோனா நோயாளியின் உறவினர்கள் 7 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர். தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கும், கொரோனா நோயாளியின் உறவினர்களுக்கும் ஏற்பட்ட மோதல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.