சின்னாளபட்டி: திண்டுக்கல் அருகே குட்டியபட்டியில் மாவட்ட சேவல் பாதுகாப்போர் சங்கம் மற்றும் இந்திய சேவல் வளர்ப்பு நண்பர்கள் சங்கம் சார்பாக சேவல் கண்காட்சி நேற்று நடந்தது. இதில் ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சேவல் வளர்ப்போர் ஏராளமானோர் பங்கேற்றனர். இவர்கள் கொண்டு வந்த சேவல்களை, பந்தலின் நடுவே டோக்கன் எண்ணுடன் பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தியிருந்தனர்.
இதன்படி விசிறிவால் சேவல்களில் வெள்ளை விசிறிவால், கருங்கீரி, தூயவெள்ளைக்கீரி, பொன்றங்கீரி, நூலாங்கீரி உள்ளிட்ட வகைகளும் கிளிமூக்கு சேவல்களில் காகம் ரக கிளி மூக்கு, மத்திப்பூ, உச்சிப்பூ ரகங்களும் இடம் பெற்றிருந்தன. திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சின்னாளபட்டி, கன்னிவாடி, பழநி, ஒட்டன்சத்திரம், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, கல்லல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேவல்சண்டை ஆர்வலர்களும் குவிந்திருந்தனர்.
கண்காட்சியில், சேவல் வளர்ப்போர் பயன்படுத்தும் தண்ணீர் குடுவை, தொட்டி, மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்யும் கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன. சேவல் சண்டை பிரியர்கள் கண்காட்சியில் இருந்த சேவல்களை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.4 லட்சம் வரை விலைபேசி வாங்கிச்சென்றனர்.