சென்னை: இடைத்தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் குஜராத்துக்கு திடீர் பயணம் மேல்கொள்கிறார். அகமதாபாத்தில் நடக்கும் தமிழ் சங்கத்தின் பொங்கல் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து நேற்று தமிழக பாஜக தலைவர் அன்னாமலையை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் திடீரென குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு காலையில் புறப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் அவர் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவருடன் மனோஜ் பாண்டியன் உட்பட 3 பேர் பயணம் செய்கின்றனர். மேலும், குஜராத்தில் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.