×

ரூ.114 கோடியில் தஞ்சாவூர்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி தீவிரம்

திருவாரூர்: தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணியானது ரூ. 114 கோடி மதிப்பீட்டில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலைகள் சரிவர சீரமைக்கப்படாததன் காரணமாக சாலைகள் அனைத்தும் போக்குவரத்திற்கு பயனற்றதாக இருந்து. இதன் காரணமாக நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது மட்டுமின்றி குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் இருந்து வந்தது.

இதற்கிடையே கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில அரசின் நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்குமாறும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு தேவையான நிலம எடுக்கும் பணிகள் மற்றும் என்ஓசி சான்று மற்றும் சாலை அமைப்பதற்கு தேவையான மண் மற்றும் அரளைகள் போன்றவற்றினை உடனடியாக ஏற்பாடு செய்து கொடுக்குமாறும் நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ. வேலு மேற்பார்வையில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சீரமைக்கப்படாத அனைத்து சாலைகளும் ஒரு வருட காலத்திற்குள் மாநில நெடுஞ்சாலை துறையின் மூலம் சீரமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் சுமார் ரூ.100 கோடி மதிப்பில் ஆயிரத்து 250 கி.மீ. நீளத்திற்கு சாலைகள் அகலப்படுத்தும் பணி மற்றும் சீரமைப்பு பணிகள் போன்றவை நடைபெற்றுள்ளன. இதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் பாலங்கள், சிறு கல்வெட்டுகள் மற்றும் மழைநீர் வடிகால் போன்றவையும் நெடுஞ்சாலை துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மைசூரிலிருந்து நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையானது தஞ்சையிலிருந்து நாகை வரையில் இருவழி சாலையாக அகலப்படுத்தும் பணி ஒன்றிய அரசு மூலம் 2ம் கட்டமாக ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மீண்டும் பணிகள் துவங்கியது.

இந்நிலையில் இந்த சாலை விரிவாக்க பணியானது ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த பணியினை காரணம் காட்டி ஏற்கனவே இருந்து வரும் சாலையானது மிகவும் குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்ற சாலையாக இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சாலையினை சீரமைக்க கோரி கடந்த அதிமுக ஆட்சி காலங்களில் அவ்வப்போது போராட்டங்களும் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த சாலையினை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இதுகுறித்து நெடுஞ்சாலைதுறை அமைச்சர் ஏ.வ.வேலு பெரும் முயற்சியின் காரணமாக ஒன்றிய அரசின் நிதி மூலம் ரூ 114 கோடியே 87 லட்சம் மதிப்பில் 80 கி.மீ நீளத்திற்கு இந்த சாலையினை சீரமைக்கும் பணியானது தற்போது துவங்கியுள்ளது.

அதன்படி நாகையிலிருந்து கடந்த மாதம் 1ம் தேதி இந்த சாலை அமைக்கும் பணியானது துவங்கியுள்ள நிலையில் தற்போது இந்த பணி திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் வரையில் முடிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

Tags : Thanjavur ,Nagapatnam National Highway , Thanjavur-Nagapatnam National Highway repair work intensifies at Rs.114 crore
× RELATED மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை