மதுரையில் வாகன சோதனை நடத்திய எஸ்ஐ, போலீசார் மீது பெட்ரோல் குண்டுவீச்சு: அரிவாளாலும் வெட்ட முயன்ற ரவுடி தப்பி ஓட்டம்

மதுரை: மதுரையில் வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்ஐயை அரிவாளால் வெட்ட முயன்றும், வெடிகுண்டுகளை வீசியும் கொல்ல முயன்ற ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலைய எஸ்ஐ அழகுமுத்து மற்றும் காவலர்கள் நாகசுந்தர், கணேஷ் பிரபு, பிரபாகர் ஆகியோர், நேற்று முன்தினம் இரவு மாடக்குளம் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தினர். அதிலிருந்து மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த ரவுடி கூல் மணி என்கிற மணிகண்டன் இறங்கினார். அவருக்கும், எஸ்ஐக்கும் ஏற்கனவே விரோதம் இருந்துள்ளது. தன் மீது வழக்கு பதிந்தது குறித்து கேட்டு எஸ்ஐயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்பு திடீரென காரில் வைத்திருந்த அரிவாளை எடுத்து எஸ்ஐயை வெட்ட முயன்றார். எஸ்ஐ விலகியதால் தப்பினார். இதையடுத்து ரவுடி மணிகண்டனை மற்ற போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் மீது அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார். ஒரு குண்டு புதருக்குள் விழுந்து வெடித்தது. மற்றொரு குண்டு ரோட்டோரம் இருந்த சாக்கடைக்குள் விழுந்ததால் வெடிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் போலீசார் நிலைகுலைந்தனர். அப்போது, ரவுடி மணிகண்டன், காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். கார், பெட்ரோல் குண்டு பறிமுதல் செய்யப்பட்டது.  ரவுடி மணிகண்டனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

Related Stories: