புதுடெல்லி: இந்திய அளவில் பிரபலமான தொழிலதிபர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர். இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர். இவரது மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சண்டுக்கும் மும்பையில் உள்ள ஆன்டிலா இல்லத்தில் இன்று மாலை குஜராத் முறைப்படி நிச்சயதார்த்த நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், பாலிவுட் நடிகர், நடிகைகள் என பல முக்கிய பிரமுகர்கள் மட்டுமே கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் 29ம் தேதி திருமண உறுதிபடுத்தும் நிகழ்வான ‘ரோக்கா விழா’ ராஜஸ்தானின் நாத்ஜி கோயிலில் நடந்தது.
ஆனந்த் அம்பானியை திருமணம் செய்து கொள்ள உள்ள ராதிகா மெர்சண்ட், மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தொழிலதிபர் வீரேன் மெர்சண்ட்டின் மகள் ஆவார். அமெரிக்காவின் நியூயார்க்கில் பட்டப்படிப்பு முடித்துள்ள ராதிகா மெர்சண்ட் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். ஆனந்த் அம்பானி, ரிலையன்ஸ் குழுமத்தின் உயர்மட்ட குழு உறுப்பினராக உள்ளார். மேலும் அவர் ரிலையன்ஸ் தொழில் நிறுவனத்தின் ஆற்றல் வணிகத்தையும் கவனித்து வருகிறார்.