ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தின் வழியாக தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நீதிமன்ற வளாகம் அருகே பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த வாகனத்தை வீரர்கள் தடுத்து நிறுத்த முயன்றபோது அதில் இருந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனையடுத்து வீரர்கள் கொடுத்த பதிலடியில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் லஷ்கர் தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்த அர்பாஸ் மிர் மற்றும் ஷாகித் ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து ஏகே ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.