காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வயல்வெளியில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை அவ்வழியாக சென்ற 4 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று மாலை தனது ஆண் நண்பருடன் செவிலிமேடு அருகேயுள்ள குண்டுகுளம் வயல்வெளி பகுதியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்மகும்பல், மாணவி அருகில் சென்று கத்தியைகாட்டி ஆண் நண்பர் கண் முன் 4 பேரும் கமலாவை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் கும்பல் மிரட்டியுள்ளது. இதையடுத்து வீட்டுக்கு சென்ற ஆண் நண்பர், இந்த தகவலை உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
கல்லூரி மாணவியிடம் நடத்திய விசாரணையில், 4 பேரும் மாஸ்க் அணிந்திருந்ததால் அடையாளம் சரியாக தெரியவில்லை என தெரிவித்துள்ளார். சம்பவத்தின்போது விமல் என ஒருவரை அழைத்துள்ளனர். இதனால் விப்பேடு பகுதியை சேர்ந்த விமல் என்பவரை போலீசார் தேடினர். போலீசார் தேடுவதை அறிந்ததும் அவர் தப்ப முயன்றுள்ளார்.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தாலுகா காவல்நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தப்பிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.