சென்னை: சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை. பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள். பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள் அல்லது பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள் அல்லது மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள் அல்லது அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். மொத்தம் 7 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தகுதியான நபர்கள் சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் 2ம் தளத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரிடையாகவோ பதிவஞ்சல் மூலமாகவோ வரும் 18ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அளிக்கலாம்.
காலிப்பணியிட விவரம்: இடைநிலை ஆசிரியர் (சம்பளம் ரூ.7500), (2 காலிப்பணியிடம்) - 1. அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி, வெங்கடேசபுரம், சென்னை. பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்), (சம்பளம் ரூ.10,000) - 1. அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, திருமங்கலம், சென்னை. 2. அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, மதுரவாயல், சென்னை. (ஆங்கிலம்) 3. அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, பாலவாக்கம், சென்னை. (அறிவியல்) முதுகலை பட்டதாரி (இயற்பியல்), (சம்பளம் ரூ.12,000) - 1. அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கன்னிகாபுரம், சென்னை. 2. அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கன்னிகாபுரம், சென்னை. (வரலாறு). இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.