சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நியாய விலை கடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு செய்தார். பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முழு கரும்புடன் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் ரூ.1000 ரொக்கமாக பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் கடந்த 9ம்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு பொருட்கள் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் நேற்று முன்தினம் 116வது வார்டு, வெங்கட்ராம் தெருவில் உள்ள அமுதம் நியாய விலைக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, நியாய விலை கடையில் உள்ள பதிவேடுகளை பார்வையிட்டு, மொத்தமுள்ள குடும்ப அட்டைதாரர்கள் எண்ணிக்கை, இதுவரை வழங்கப்பட்டுள்ள தொகுப்புகள் எண்ணிக்கை விவரம் ஆகியவற்றை கேட்டறிந்தார். மேலும் பணியாளர் பதிவேடு, பொருட்கள் பதிவேடு மற்றும் இருப்பு பதிவேடுகளை ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். மேலும், பொங்கல் பரிசு தொகுப்புகள் அட்டவணையின்படி முறையாக விநியோகம் செய்திடவும், அனைத்து பதிவேடுகளையும் முறையாக பராமரித்திடவும் பணியாளர்களை கேட்டுக்கொண்டார். அப்போது, சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் (பணிகள்) சிற்றரசு உடனிருந்தார்.