ஆலந்தூர்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், ஆலந்தூர் வடக்கு பகுதி 160வது வட்ட திமுக சார்பாக, தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழாவையொட்டி, கோலப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா ஆலந்தூர் புது தெருவில் நேற்று நடந்தது. விழாவிற்கு, வட்ட மாமன்ற உறுப்பினர் பிருந்தாஸ்ரீ முரளி கிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆலந்தூர் வடக்கு பகுதி திமுக செயலாளர் பி.குணாளன், ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், வட்ட திமுக செயலாளர் கே.பி.முரளிகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். வட்ட அவைத்தலைவர் எம்.வி.குமார் வரவேற்றார்.
விழாவில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், முன்னாள் எம்பி ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்துகொண்டு மகளிர் போட்ட வண்ண கோலங்களை பார்வையிட்டனர். இதில், சிறந்த கோலங்கள் போட்டு முதல் 3 பரிசு பெற்ற 3 பேருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள சமையல் பாத்திரங்களும், 2வது பரிசாக 3 பேருக்கு ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள சமையல் பாத்திரங்களையும் அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆர்.எஸ்.பாரதி வழங்கினர். மேலும், கோலப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் தோசை கடாய் மற்றும் 1000 பெண்களுக்கு புடவை போன்றவற்றை வழங்கினர். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் வந்தே மாதரம், பொதுக்குழு உறுப்பினர்கள் கீதா ஆனந்தன், இரா.பாஸ்கர், கவுன்சிலர் துர்காதேவி நடராஜன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.