சென்னை: ஆளுநர் உரை என்பது ஒன்றிய அரசு எழுதிக் கொடுத்ததை அட்சரம் பிசகாமல், பிறழாமல் படிப்பது அதுதான் மரபும், சட்டமும் ஆகும். ஆனால், தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கக் கூடிய ஆர்.என். ரவி ஆளுநராகப் பொறுப்பேற்றது முதல், சட்ட விரோதமாகவும், தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், மதச் சார்பின்மைக்கு மாறாகவும் பேசி வருகிறார்.
உச்சக்கட்டமாக ஆளுநர் உரையில் இன்று (9.1.2023) தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இல்லாததைப் படிப்பதும், அறிக்கையில் இடம் பெற்றிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயர்களைப் படிக்காமல், உதாசீனம் செய்ததும் கண்டிக்கத்தக்கதாகும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுவரை நடந்திராத அநாகரிக செயலாகும் என்றும் இதனைத் திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
ஆளுநரின் இந்த சட்ட மீறலை, மரபு மீறலை முதலமைச்சர் சுட்டிக்காட்டி, ஏற்கெனவே ஆளுநர் ஒப்புக்கொண்டு, அச்சிடப்பட்டுள்ள உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என்று அறிவித்தது. திராவிட மாடல் அரசின் நாயகர் என்பதற்கான அடையாளமே என்றும் தமிழ்நாடு ஆளுநர் பதவி விலகலே மரியாதையாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.