சின்னமனூர் : சின்னமனூர் பகுதியில் தனிப்பயிராகவும், சில இடங்களில் ஊடுபயிராகவும் பச்சை மிளகாய், குண்டு மிளகாய், சம்பா மிளகாய் என பயிரிட்டு விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த மிளகாய் 70 நாட்களில் நிலத்தடி நீர் பாசனம் மூலம் வளர்த்தெடுக்கப்படுகிது. பின்னர் அறுவடை துவங்கி ஒரு மாதம் வரை, வாரம் ஒருநாள் மிளகாய் பலனாக வந்து கொண்டே இருக்கும். ஏக்கருக்கு சுமார் ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து உற்பத்தி மிளகாயினை பறித்து மூடைகளாக சின்னமனூர் ஏலசந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த மிளகாய்களை தமிழக, கேரளா வியாபாரிகள் ஏலம் மூலம் கொள்முதல் செய்து எடுத்து செல்கின்றனர்.
தற்போது பனி, வெயில், மழை என பருவ நிலை மாற்றத்தின் காரணமாக பச்சை மிளகாய் வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் வியாபாரிகள் சிலர், தற்போது ஆந்திராவில் இருந்து சம்பா போன்ற பச்சை மிளகாய்களை அதிகளவு இறக்குமதி செய்துள்ளனர். அதனை தரம் பிரிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தரம் பிரித்த மிளகாய்களை உள்ளூர் மற்றும் கேரளாவிற்கு அனுப்பி வைக்கும் பணியில் வியாபாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.40 ஆக விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் உற்பத்தி சரிவர இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.