சென்னை: 2022-23ம் ஆண்டிற்கான கலைத் திருவிழாவில் கலந்து கொண்டு வெற்றிபெற்று, தமிழ்நாடு முதல்வரிடம் பரிசு பெறுவதற்காக சென்னைக்கு வந்துள்ள மாணவ, மாணவிகளை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 200 வகைகளுக்கு மேற்பட்ட கலையினங்களில் கலைத்திருவிழா போட்டிகள் பள்ளி, வட்டார, வருவாய் மற்றும் மாவட்ட அளவில் நடத்தப்பட்டது.
இதில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் கோயம்புத்தூர், மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ஐந்து மாவட்டங்களில் நடைபெற்றது. இப்போட்டிகளில் 17,569 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கலை இனத்திலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வரும் 12ம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் நினைவு பரிசும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்குகிறார்.
இவ்விழாவில் கலந்து கொள்ள 38 மாவட்டங்களில் இருந்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் சென்னைக்கு வர உள்ளனர். இவர்களில் முதல்கட்டமாக கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்துள்ள 222 மாணவ மாணவிகளை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர ராஜா, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன், மாநில ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் திட்ட இயக்குநர் ராமேஸ்வர முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.