திருக்காட்டுப்பள்ளி : திருக்காட்டுப்பள்ளி நேதாஜி மார்க்கெட்டிற்கு வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் விலை குறைவால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திருக்காட்டுப் பள்ளியில் நேதாஜி மார்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு காய், கனி மார்கெட்டும், வாழை காய் மார்கெட்டும் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு திருக்காட்டுப்பள்ளி சுற்றியுள்ள கிராமப்புறங்களிலிருந்து விளையும் காய், கனிகள், வாழைத்தார்கள் , அனைத்தும் இந்த மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் திருச்சி மார்கெட்டிலிருந்து முட் டைகோஸ், காலிபிளவர், பீட்ரூட், உருளைக்கிழங்கு, கேரட் போன்றவைகளை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மார்க்கெட்டின் சங்க தலைவர் வரதராஜன் கூறுகையில், இந்த மார்க்கெட்டிற்கு இப்பகுதியிலிருந்து விவசாயிகள் வாழை தார் கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனர். அப்படி விற்பனை செய்யப்படும் வாழை தார்கள் அதிக அளவில் வருகிறது. ஆனால் விற்பனை விலையோ மிகவும் குறைவாக விற்கப்படுகிறது. இதில் பூவன் ஒரு தார். அதிகபட்சமாக ரூ.200க்கும், மொந்தன் ரூ-500க்கும், பச்சலாடன் ரூ.400க்கும், கற்பூரவள்ளி அதிகபட்சம் ரூ.380 க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும், பொங்கல் வர இன்னும் சில நாட்களே உள்ளது.பொங்கலுக்கு வாழைத்தார் அதிக அளவிற்கு விற்றால் தான் விவசாயிகள் வாழ்வில் நலமாக இருக்கும் என்று தெரிவித்தார். தற்போது மார்க்கெட்டில் வாழைத்தார் விலை குறைவால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.