சென்னை: என்.எல்.சி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி 2 நாள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டத்தின் விளைநிலங்களையும், விவசாயிகளையும் என்.எல்.சி நிறுவனத்தின் நிலப்பறிப்பு முயற்சியிலிருந்து காப்பாற்ற வேண்டிய பெரும் தேவையும், கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் அதனை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும். இயற்கை வளங்களும் அழிந்துபோகும். என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களைத் தருவதால் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை.
என்.எல்.சி நிறுவனம் 2025ம் ஆண்டுக்குள் தனியாருக்கு விற்கப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. அவ்வாறு என்.எல்.சி தனியார்மயமாக்கப்பட்டால், தனியார் நிறுவனத்தால் நிலங்களை கையகப்படுத்த முடியாது. எனவே, தனியார்மயமாக்குவதற்கு முன்பாகவே 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, அதையும் சேர்த்து தனியாருக்கு விற்க என்.எல்.சி திட்டமிட்டிருக்கிறது. என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி இன்றும் நாளையும் என்.எல்.சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எழுச்சி நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.