×

புரொபஷனல் கூரியர் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை..!

சென்னை: புரொபஷனல் கூரியர் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையை தலைமையிடமாக கொண்டு புரொபஷனல் கூரியர் நிறுவனம் இயங்கி வருகிறது. பிரபல தனியார் நிறுவனமான இந்த கூரியர் நிறுவனத்திற்கு சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 30 மாவட்ட தலைநகரங்களில் அலுவலகங்கள் உள்ளது. இந்த நிறுவனத்தில் பார்சல் ஏற்றுவது, டெலிவரி ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் என மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பிரபலமான இந்த கூரியர் நிறுவனம் என்பதால் பொதுமக்கள் அதிகளவில் புரொபஷனல் கூரியர் நிறுவனத்தையே நாடி வருகின்றனர். இந்த நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து கூட பார்சல்கள் மற்றும் தபால்கள் வருகிறது. இந்நிலையில் 2021-22ம் நிதி ஆண்டில் புரொபஷனல் கூரியர் நிறுவனம் பல கோடி ரூபாய் வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேநேரம், தமிழகத்தில் முதலிடத்தில் உள்ள இந்த புரொபஷனல் கூரியர் நிறுவனம் வருமான வரித்துறைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கு காட்டியதாகவும் கூறப்படுகிறது.

அதனடிப்படையில், வருமான வரி புலனாய்வுத் துறை அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை முதல் சென்னை மண்ணடி, நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட 6 இடங்களில் செயல்படும் புரொபஷனல் கூரியர் நிறுவன அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பல முக்கிய ஆவணங்கள் மற்றும் நகை, பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. நுங்கம்பாக்கம், கிண்டி, பிராட்வே, ஆழ்வார்பேட்டை உள்பட சென்னையில் 6 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. தமிழகத்தில் சுமார் 30 இடங்களில் நடக்கும் சோதனையில் வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Professional Courier Company ,Income , Income Tax officials raided the places related to the Professional Courier Company for the 3rd day..!
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...