சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு:
2022-23ம் நிதியாண்டிற்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சென்னை மாவட்டத்தைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்களுக்கு ரூ.1 கோடி கடன் வழங்க சென்னைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் பயன்பெற பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
பொது காலக் கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலும், பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிர் மற்றும் ஆடவர் உறுப்பினர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரையிலும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரு.15 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. மேலும் இரு கறவை மாடுகள் வாங்க ரூ.60,000 வரை கடன் வழங்கப்படுகிறது. கடன் பெற விரும்புவோர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கிக் கிளைகளிலும் கடன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தங்களுக்கு அருகாமையில் உள்ள கூட்டுறவு வங்கி கிளைகளில் ஒப்படைத்து பயன்பெறலாம்.