சென்னை: கேளம்பாக்கம் அருகே சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 16 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை அருகே கோவளத்தில் 5 நட்சத்திர ஓட்டலில் அடுத்த மாதம் ஜி20 நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 20 நாடுகளின் தலைவர்கள், தூதர்கள், பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடந்த வாரம் போலீசார் ஆய்வு மேற்கொண்டு ஓட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் குறித்த விவரம் சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், எஸ்ஐக்கள் பாண்டுரங்கன், தமிழன்பன் உள்ளிட்ட போலீசார் படூர் பகுதியில் வாடகைக்கு தங்கி இருக்கும் நபர்களின் விபரங்களை சேகரித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, சாலையோரத்தில் குடில் அமைத்து தங்கி இருந்த நபர்களிடம் அவர்கள் யார் என்று கேட்டனர். அந்த நபர்கள் இந்தி மற்றும் உருது மொழியில் பேசினர். இதையடுத்து, சந்தேகத்தின்பேரில் அங்கிருந்த 16 பேரிடம் விசாரணை செய்தனர். அதில், இவர்கள், கடந்த 2019ம் ஆண்டு வங்கதேசத்தில் இருந்து தப்பி இந்தியா வந்து கர்நாடகாவில் தங்கி உள்ளனர். பின்னர், கேளம்பாக்கத்தில் மியான்மரை சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் தங்கி உள்ள அரசினர் முகாமில் தங்க சென்னை வந்தனர்.
இதையடுத்து, கேளம்பாக்கம் போலீசார் கியூ பிராஞ்ச் மற்றும் மாவட்ட எஸ்பிக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து வங்கதேச நபர்களிடம் விசாரணை நடத்தினர். அனைவரும் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து தங்கி இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முகமது பைசல் (42), முகமது நஸ்மல் (38), முகமது ஜமால் (44), முகமது எலால் (25), பர்ஷாகான் (38), முகமது பிலால் (20), சுல்தான் பார்ஜி (26), முகமது ரஜாகுல் (29), அமினுல் (38), முகமது சலீம் (45), முகமது ஷாரிக் (26), சத்தார் சகல் (30), ஹசன் (27), சுலாஸ் (30), ஹசன் ஷேக் (20), முகமது மசூம் (35) ஆகியோர் மீது பாஸ்போர்ட் சட்டம் மற்றும் அயல் நாட்டினர் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.