×

சென்னையில் வரும் 13ம் தேதி சென்னை சங்கமம், நம்ம ஊரு திருவிழா: முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சென்னை: சென்னை சங்கமம், நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை வரும் 13ம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள சுற்றுலாத்துறை தலைமை அலுவலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் ‘சென்னை சங்கமம்’, ‘நம்ம ஊரு திருவிழா’ குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் கலந்துகொண்டார்.

இதுகுறித்து நிருபர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருப்பதாவது:
கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி, இது நம்ம ஊரு திருவிழாவாக இணைந்து ஒரு  புத்தாக்கத்துடனும், புத்துணர்ச்சியுடனும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 13ம்  தேதி துவங்கி, 17ம் தேதி வரை சென்னையில்  நடைபெறவிருக்கிறது. ஏறுதழுவல், சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சி, பொங்கல் திருவிழா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள நிலையில் அதில் மிக முக்கியமாக ‘சென்னை சங்கமம்’, ‘நம்ம ஊரு திருவிழா’ நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும், 7 மண்டலங்களாக  இருக்கக்கூடிய சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சாவூர்,  திருநெல்வேலி உள்ளடக்கியுள்ள எல்லா இடங்களிலும், இந்த கலை  நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது.இந்த நிகழ்ச்சியினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 13ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியிருப்பதாவது:
தீவுத்திடலில் ஜன. 13ம் தேதி இந்த நிகழ்வுகள் தொடங்கும். அதனை தொடர்ந்து, 14ம் தேதியிலிருந்து, சென்னையில் இருக்கக்கூடிய பல்வேறு பூங்காக்கள், விளையாட்டுத்திடல்கள் என 16 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மாலை நேரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சிகளோடு சேர்த்து உணவுத் திருவிழாவும் தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய நம்முடைய பாரம்பரிய உணவுகள், அந்தப் பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் அதிகமாக விரும்பக்கூடிய உணவுகள், சென்னைக்கு அதிகம் பழக்கம் இல்லாத உணவுகள், இவை அனைத்தையும் கொண்டு வந்து உணவுத் திருவிழாவையும் இணைத்து நடத்த இருக்கிறோம்.  

இதில், திரைப்பட இசைக்கலைஞர் சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது குழுவினர் இந்த நிகழ்சியினை ஒருங்கிணைத்து தரவுள்ளனர். இந்த கலைநிகழ்ச்சியில் 700 கலைஞர்கள் கலந்து கொள்வார்கள். பொதுமக்கள் இலவசமாக நிகழ்ச்சிகளை பார்வையிடலாம். தீவுத்திடலில் கடந்தாண்டு நடந்த உணவுத்திருவிழாவில் மாட்டுக்கறி சர்ச்சை ஆனது, ஆனால் உணவு என்பது ஒரு தனிப்பட்ட முடிவு, அதை சர்ச்சையாக மாற்ற வேண்டிய அவசியமில்லை.


Tags : Chennai Sangamam ,Namma Uru Festival ,Chennai ,Chief Minister , Chennai, 13th Chennai Sangamam, Namma Uru Festival,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...