தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்கரையில் ஒதுங்கிய ரூ.2.5லட்சம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் நேற்று அடுத்தடுத்து சாக்குமூட்டைகள் கரை ஒதுங்கின. இதுகுறித்து தகவல் அறிந்த வடபாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு 5 மூட்டைகளில் தலா 30 கிலோ எடை கொண்ட பீடி இலைகள் இருந்தது தெரிய வந்தது. மேலும் 2 மூட்டைகள் கடலில் பாறைகளுக்கு இடையே சிக்கி இருந்தன. அவற்றை மீனவர்கள் உதவியுடன் மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இதில் தலா 30 கிலோ எடை கொண்ட 7 மூட்டைகள் மீட்கப்பட்டன. இது குறித்து வடபாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.
கைப்பற்றப்பட்டுள்ள பீடி இலைகளின் மதிப்பு ரூ.2.5 லட்சம் எனத்தெரியவந்துள்ளது. பீடி இலைகளுக்கு இலங்கையில் அதிக விலை கிடைப்பதால சமீப காலமாக அவை இலங்கைக்கு கடத்தப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது. அவ்வாறு கடத்துவதற்காக மூட்டைகளை கொண்டு வந்தபோது, இந்த மூட்டைகள் கடலில் விழுந்திருக்கலாம் என்றும் அல்லது கடலோர காவல்படையினரிடம் சிக்கி விடக்கூடாது என கருதி கடத்தல்காரர்கள் இதனை கடலில் வீசியிருக்கலாமா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடத்தலில் ஈடுபட்டது யார்? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.