×

சென்னை பள்ளிகளில் தொடங்கப்பட்ட பள்ளி இல்ல நூலகத் திட்டத்தால் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிப்பு: மாநகராட்சி தகவல்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில், நகராட்சி நிரஙவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனையின்படி, சென்னைப் பள்ளி மாணவ, மாணவிகள் பாடப்புத்தகங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு புத்தகங்களை படித்து வாசிக்கும் திறனை மேம்படுத்திடும் வகையில் சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் அனைத்து சென்னை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் “பள்ளி இல்ல நூலகத் திட்டம்” செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மேயர் சிறப்புத் திட்ட அறிவிப்பில் அறிவித்தார்.

சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப்பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும், 92 நடுநிலைப்பள்ளிகளும், 119 தொடக்கப்பள்ளிகளும் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்வியாண்டில் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 66,414 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். சென்னை மாநகராட்சியின் சென்னைப் பள்ளிகளில் பள்ளி நூலகங்கள் மாணவர்களின் பயன்பாட்டிற்காக உள்ளன. அனைத்து சென்னைப் பள்ளி நூலகங்களிலும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இந்த பள்ளி நூலகங்களில் உள்ள புத்தகங்களை மாணவர்கள் பள்ளிகளிலேயே அமர்ந்து படித்து திரும்ப ஒப்படைக்கும் வகையில் இருந்தன.

மேயர் அறிவிப்பின்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்னைப் பள்ளிகளில் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வாசிக்கும் திறன், கற்றல் திறன், விமர்சனம் எழுதுதல், பேச்சுத்திறன், வரைதல் மற்றும் குறு நாடகம் ஆகிய திறன்களை வளர்த்திடும் வகையில் பள்ளி நூலகங்களிலிருந்து கதை, கவிதை, நாடகம், கட்டுரை, வரலாறு, இலக்கியம், பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களைப் பெற்று வீட்டிலும் விரும்பி வாசித்துப் பயன்பெறும் வகையில் “பள்ளி இல்ல நூலகமானது” கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.

“பள்ளி இல்ல நூலகம்” திட்டத்தின் மூலம் சென்னைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியரும் புத்தகங்களை இல்லங்களுக்கு எடுத்துச் சென்று விரும்பி வாசிக்கும் திறனை அதிகரிக்க, அதாவது 100 சதவீதம் பூர்த்தியடையும் வகையில் மாணவர்களை ஊக்கப்படுத்தி இந்த திட்டம் உருவாக்கப்பட்ட நோக்கத்தை அடையும் பொருட்டு முனைப்புடன் செயல்பட ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு, அதன்படி இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி நூலகங்களில் புத்தகங்களை மிகவும் விரும்பிப் பெற்று பயனடையும் மாணவர்களின் விவரங்கள் பெறப்படுகின்றன.

அதனடிப்படையில், இந்தப் பள்ளி இல்ல நூலகத் திட்டத்தின் மூலம் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் 12,256 மாணவ, மாணவியரும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 13,324 மாணவ, மாணவியரும் புத்தகங்களை மிகவும் விரும்பிப் பெற்று இல்லங்களுக்கு எடுத்துச் சென்று வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தி பயனடைந்துள்ளனர். இதன் மூலம் சென்னைப் பள்ளிகளின் மாணவ, மாணவிகளிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கம் மேம்படுத்தப்பட்டு, அதன் வாயிலாக அவர்களது வாசிக்கும் திறன், கவனிக்கும் திறன், கற்றல் திறன் மேம்பாடு அடைந்து வருகிறது.



Tags : School House Library ,Chennai , Chennai School, School Home Library Project, Student, Learning Ability, Increase
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்