சென்னை: இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி டானியாவிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். சென்னை ஆவடியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்-சௌபாக்கியா இவர்களின் மூத்த மகள் 9 வயது சிறுமி டானியா, ஆறரை வருடங்களாக அரிய வகை முக சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தார். ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சவீதா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி அனுமதிக்கப்பட்டு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து தமிழக முதல்வர் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
தற்போது, 2ம் கட்ட சிகிச்சைக்காக சிறுமி டானியா தண்டலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவரின் முழு கண்காணிப்பில் இருந்து முழு உடல் பரிசோதனைக்கு பிறகு முக சீரமைப்பு செய்யப்பட்ட பகுதியில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. இதனிடையே பால்வளத்துறை அமைச்சர் நாசர் சிறுமி டானியா, பெற்றோரை நேரில் சந்தித்ததோடு, மருத்துவ குழுவைவும் சந்தித்தார். பின்னர் தொலைபேசி மூலம் சிறுமி டானியாவிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டு, உடல்நலம், கல்வி குறித்து கேட்டறிந்தார். சிறுமியிடம் முதல்வர் தொலைபேசியில் பேசியது மருத்துவமனையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.