சென்னை: ராகுல் காந்தியின் நடைபயணம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும், கடைசியில் மிஞ்ச போவது ஏமாற்றமே எனவும் குஷ்பு தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே கொரோனா பரவலை காரணம் காட்டி ராகுல் காந்தியின் பாதயாத்திரையை ஒன்றிய பாஜக அரசு தடுத்து நிறுத்த முயற்சித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், ராகுல்காந்தியின் நடைபயணம் பற்றி பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது: காங்கிரஸ் கட்சி இந்திய மக்களிடம் இருந்து விடை பெற்றுவிட்டது. இல்லாத ஊருக்கு வழி தேடுவதை போல் இல்லாத கட்சிக்காக ஊர் ஊராக ராகுல் நடைபயணம் செல்கிறார். இந்த நடைபயணம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை, கடைசியில் மிஞ்ச போவது ஏமாற்றமே என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
உலகமே மீண்டும் கொரோனா வருகிறதே என்ற பீதியில் இருக்கிறது. அதற்காக ஒன்றிய அரசு எடுத்துள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கை டெல்லியில் ராகுல் நடைபயணத்தை முடக்க செய்யும் சதி வேலை என்கிறார். இப்படித்தான் ஒவ்வொருவரும் ராகுலிடம் நல்ல பெயர் வாங்க அவரை சுற்றி இருந்து ஜால்ரா தட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.
கொரோனா கட்டுப்பாட்டையே அரசியலாக்கும் இவர்களுக்கு மக்கள் மீது எந்த அக்கறையும் கிடையாது. பாராளுமன்றத்துக்குள் செல்லவே முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதே? அதை ஏன் விமர்சிக்கவில்லை. மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. நமக்கு அரசியல் செய்ய வேண்டும் என்ற குறுகிய எண்ணம்தான், இதுதான் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு காரணம் எனவும் கூறியுள்ளார்.