ஆற்காடு : மேல்விஷாரத்தில் விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ஆற்காடு டவுன் போலீசார் ₹30 ஆயிரம் அபராதம் விதித்தனர்.இந்தியாவில் பைக் உள்ளிட்ட வாகன விபத்தில் சிக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியது.
அதன்படி பைக்கில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு தற்போது அமலுக்கு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி ₹1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. தமிழகத்தில் புதிய அபராதம் விதிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அதற்கேற்ப அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு டவுன் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு மேல்விஷாரம் கத்தியவாடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது ஹெல்மெட் அணியாமலும், போக்குவரத்து விதிகளை மீறியும் பைக் ஓட்டி வந்தவர்களுக்கு மொத்தம் ₹30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும், தொடர்ந்து வாகன தணிக்கை நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர். ஒரே நாள் இரவில் ₹30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதால் மேல்விஷாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.