புதுடெல்லி: ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி வழக்கில் வீடியோகான் குழும நிறுவனர் வேணுகோபால் தூத்தை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். கடந்த 2009 மற்றும் 2011க்கு இடைப்பட்ட காலகட்டத்தில், ஐசிஐசிஐ வங்கி, வீடியோகான் குழும நிறுவனங்களுக்கு ரூ.3,250 கோடி வரை கடன் கொடுத்துள்ளது. இந்த கடன் ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகளை மீறி வழங்கப்பட்டு வராக்கடனாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடன் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோர் கடந்த 23ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களின் 3 நாள் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வீடியோகான் குழும நிறுவனர் வேணுகோபால் தூத்தை (71) சிபிஐ நேற்று அதிரடியாக கைது செய்தது. வேணுகோபாலிடம் நேற்று விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வேணுகோபால் தூத் உள்ளிட்டோர் சேர்ந்து புதிய நிறுவனம் தொடங்கி அதற்கு ஐசிஐசிஐ வங்கி மூலம் எந்த பிணையும் இல்லாமல் முறைகேடாக கடன் பெற்று மோசடி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.