கீவ்: ரஷ்யா-உக்ரைன் இடையே பிப்ரவரி தொடங்கி போர் நடந்து வருகின்றது. ஞாயிறு இரவு முதல் நேற்று காலை வரை தாக்குதல் ஏதுமின்றி வழக்கத்திற்கு மாறாக உக்ரைன் மிகவும் அமைதியாக இருந்தது. அதே நேரம் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பிராந்தியத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் ரஷ்ய வீரர்கள் 33 முறை வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் ரஷ்யாவின் ஏங்கல்ஸ் விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு உக்ரைன் முயற்சித்துள்ளது. உக்ரைன் டிரோன் விமான தளத்திற்குள் நுழைந்த நிலையில் ரஷ்ய ராணுவ வீரர்கள் அதனை சுட்டு வீழ்த்தி உள்ளனர். டிரோன் விழுந்து நொறுங்கியதில் விமானப்படை தளத்தின் ஊழியர்கள் 3 பேர் பலியானார்கள். இந்த விமான தளம் உக்ரைனால் குறி வைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே கடந்த 5ம் தேதி இதேபோல் டிரோன்கள் மூலமாக இதே விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு உக்ரைன் முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.