புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே மொத்தம் 2,289 கிமீ சர்வதேச எல்லை உள்ளது. இதில்,காஷ்மீரில் மட்டும் 772 கிமீக்கு எல்லைகட்டுப்பாடு கோடு உள்ளது. போர் ஒப்பந்தத்தை மீறி கடந்த செப்டம்பர் 6ம் தேதி, ஜம்முவில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென இந்திய ராணுவத்தினர் மீது துப்பாக்கசூடு நடத்தியது. அதை தவிர எல்லையில் இருதரப்புக்கும் பெரிய அளவில் மோதல் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிகளில் ராணுவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை இந்திய ராணுவம் செய்து வருகிறது.
இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறுகையில்,‘‘எல்லை பகுதியான ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பதுங்கு குழிகள், எல்லை வேலி சீரமைப்பு, ராணுவ டாங்க்குகள் முன்கள பகுதிக்கு வர வசதியாக சரிவு பாதை அமைத்தல்,கண்காணிப்பு டவர் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜம்முவில் 26 கிமீ பகுதியில் இந்த பணிகள் முடிந்துள்ளன. மேலும் 33 கிமீ தூரத்துக்கு பணிகள் நடந்து வருகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் நிதி ஒதுக்கீடு மூலம் இந்த பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது’ என்றனர்.