சென்னை: மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேருக்கு முதன்மை செயலாளர் பதவியில் இருந்து தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமை செயலாளர் இறையன்பு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
ஜெ.ராதாகிருஷ்ணன் (கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர்), ராஜேந்திரகுமார் (ஒன்றிய அரசின் எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை கூடுதல் செயலாளர்), நீரஜ் மிட்டல் (தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சர்வீஸ் கூடுதல் தலைமை செயலாளர்), ராஜேஷ் லக்கானி (தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மின்உற்பத்தி, மின்பகிர்வு கழகத்தின் தலைவர்), மங்கத் ராம் சர்மா (பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர்),
பிரதீப் யாதவ் (நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை), குமார் ஜெயந்த் (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை), கே.கோபால் (போக்குவரத்து துறை) ஆகியோர் தற்போது முதன்மைச் செயலாளராக உள்ளனர். இவர்கள் அனைவரும் 1992ம் ஆண்டு ஐஏஎஸ் பணியில் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு தமிழக அரசு, தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளது. தலைமைச் செயலாளர் பதவி ஒன்றுதான் உள்ளதால், 8 அதிகாரிகளும் கூடுதல் தலைமைச் செயலாளர் என்று அழைக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.