கும்பகோணம்: அம்பேத்கரின் 66வது நினைவுநாள் கடந்த 6ம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி இரவு இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி (42) என்பவர் அம்பேத்கர் நெற்றியில் விபூதியிட்டும், காவி உடை அணிந்தபடியும், காவிய தலைவனின் புகழை போற்றுவோம் என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒன்றை மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டியிருந்தார். சர்ச்சைகள் நிறைந்த போஸ்டரை கும்பகோணம் போலீசார் விடிய, விடிய கிழித்து எறிந்தனர்.
தொடர்ந்து போஸ்டர் ஒட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தை கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன் கும்பகோணம் காவல் நிலையத்தில் கடந்த 6ம்தேதி புகார் கொடுத்தார். இதன் பேரில், டிஎஸ்பி அசோகன் வழக்கு பதிந்து மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தியை கைது செய்து கும்பகோணம் கிளைச்சிறையில் அடைத்தார். இந்நிலையில் இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தியை, தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி ரவளி பிரியா பரிந்துரையின் பேரில், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று உத்தரவிட்டார். இதனடிப்படையில் குண்டர் சட்டத்தின் கீழ் குருமூர்த்தி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.