காத்மாண்டு: நேபாள சிறையில் உள்ள சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ் உடல்நலக் காரணங்களுக்காக விடுவிக்க அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1970 களில் ஆசியா முழுவதும் நடந்த தொடர் கொலைகளுக்கு காரணமான ‘தி சர்ப்பன்’ இல் சித்தரிக்கப்பட்ட பிரெஞ்சு தொடர் கொலையாளி சார்லஸ் சோப்ராஜ் (78). இவர் இரண்டு வட அமெரிக்க சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற வழக்கில் 2003 ஆம் ஆண்டு முதல் நேபாள நாட்டில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவை காரணம் காட்டி தன்னை விடுவிக்க வேண்டும் என்று சார்லஸ் சோப்ராஜ் அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நேபாள நாட்டு உச்ச நீதிமன்றம் சீரியல் கில்லர் சோப்ராஜை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான உத்தரவில்,’ சார்லஸ் சோப்ராஜை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது மனித உரிமைகளுக்கு எதிரானது. அவரை சிறையில் அடைக்க அவர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்றால் உடனடியாக அவரை விடுவித்து, 15 நாட்களுக்குள் அவரது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது. 1976ம் ஆண்டில் டெல்லி ஓட்டலில் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி விஷம் குடித்து இறந்த வழக்கில் சார்லஸ் சோப்ராஜ்இந்தியாவில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் 1986ல் தப்பித்து சென்ற அவர் மீண்டும் கோவாவில் பிடிபட்டார். 1997ல் விடுவிக்கப்பட்ட சோப்ராஜ் உடனடியாக பாரீஸ் சென்றார். ஆனால் 2003ல் நேபாளத்தில் கைது செய்யப்பட்டார்.