டெல்லி: எந்த ஒரு சூழலையும் சமாளித்திட தயாராக இருக்கிறோம் என கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக்குப் பின் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கூட்டநெரிசல் மிகுந்த இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது.
சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புக்கள் அதிகரித்தவண்ணம் உள்ளது. சடலங்களை எரிக்க பெய்ஜிங் நகரின் மயானங்களில் மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெய்ஜிங் மக்கள்தொகையில் 70%க்கும்அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். எந்நேரமும் மற்ற நாடுகளுக்கு கொரோனா தொற்று பரவும் ஆபத்து இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டுக்காக அதிகளவில் வெளிநாட்டு பயணங்கள் இருக்கும் என்பதால் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனையில், கொரோனா நிலவரம் குறித்து உயரதிகாரிகள், நிபுணர்ககளிடம் ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டறிந்தார். ஆலசோணையை தொடர்ந்து, கூட்டநெரிசல் மிகுந்த இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.
கொரோனா இன்னும் முடியவில்லை, அனைத்து மாநிலங்களும் கண்காணிப்பை தீவிரப்படுத்துக, எந்த ஒரு சூழலையும் சமாளித்திட தயாராக இருக்கிறோம் என டெல்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக்குப் பின் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.