*தலையில் கல்லை போட்டு கொன்று புதைத்தோம்
*கைதான நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே இரண்டு மாதத்திற்கு முன்பு காணாமல் போன வாலிபரின் உடல் ஏரியில் அடி ஆழத்தில் தோண்டி எடுக்கப்பட்டது. இதனிடையே வாலிபரை ெகாலை செய்து புதைத்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் கவியரசு(26), கூலி தொழிலாளி. இவரை கடந்த அக்டோபர் 6ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து தந்தை கலியமூர்த்தி விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் வழக்கு பதிந்து விக்கிரவாண்டி ஆய்வாளர் விநாயக முருகன் தலைமையில், உதவி ஆய்வாளர் பிரகாஷ் விசாரணை மேற்கொண்டனர். அதில் கவியரசு கடைசியாக அவரது நண்பரான ஆவுடையார்பட்டை சேர்ந்த ராம்குமார் (20) என்பவருடன் சென்றது தெரியவந்தது. இதையடுத்து விக்கிரவாண்டி போலீசார் சந்தேகத்தின் பேரில் ராம்குமாரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது ராம்குமார் முன்னுக்குபின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் குறுக்கு விசாரணை செய்தனர். அதில் அக்டோபர் 6ம் தேதி அன்று கவியரசு, ராம்குமார் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட நண்பர்கள் குழுவினர் ஆவுடையார்பட்டு ஏரியில் மது அருந்தியதாகவும், அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு நண்பர்களுடன் சேர்ந்து கவியரசுவை தலையில் கல்லை போட்டு கொலை செய்து ஆவுடையார்பட்டு ஏரியில் புதைத்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் ராம்குமார் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் கடந்த 17 ம் தேதி முதல் ஏரியில் விக்கிரவாண்டி தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இறுதியாக நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு சடலம் புதைக்கப்பட்ட இடத்தை உறுதி செய்தனர்.
நேற்று பகல் 11.30 மணியளவில் விக்கிரவாண்டி தனி தாசில்தார் ஜோதிவேல் முன்னிலையில்தடயவியல் துணை இயக்குனர் சண்முகம், இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் மற்றும் குழுவினர் ஏரியில் சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு படகில் பயணம் செய்து கவியரசுவின் சடலத்தை ஏரியிலிருந்து தோண்டி எடுத்தனர். பின்னர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர் கீதாஞ்சலி, தலைமையிலான மருத்துவ குழுவினர் ஏரிக்கரை பகுதியில் கவியரசுவின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் சடலத்தை அவரது தந்தை கலியமூர்த்தியிடம் ஒப்படைத்தனர்.
மேலும் ராம்குமார் கூறிய வாக்குமூலத்தின் பேரில் அவரது நண்பர்கள் 7 பேர் மீது வழக்கு பதிந்து ஆவுடையார்பட்டை சேர்ந்த நாகராஜ் மகன் ராம்குமார்(20), வில்லாளன் மகன் அன்புமணி (27), எழிலரசன் மகன் சஞ்சய்(19) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 4 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். குடிபோதை தலைக்கு ஏறி வாலிபரை அவரது நண்பர்களே அடித்து கொன்று ஏரியில் புதைத்த சம்பவம் விக்கிரவாண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
