புதுடெல்லி: பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் தொழில்அதிபர்களிடம் ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுகேசுக்கு உதவியதாகவும், அவரிடம் பல கோடி மதிப்புள்ள பரிசு பொருட்களை பெற்றதாகவும் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா பதேஹி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் ஜாக்குலின் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் நோரா சாட்சியாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். ஜாக்குலின் தனது ஜாமீன் மனுவில் நடிகை நோராவும் சுதேஷிடம் இருந்து பரிசு பொருட்களை பெற்றிருக்கிறார். ஆனால் அவர் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து நடிகை ஜாக்குலின் மற்றும் 15 ஊடக அமைப்புக்கள் மீது கடந்த 12ம் தேதி கனடாவை சேர்ந்த பிரஜையான நோரா பதேஹி கிரிமினல் புகார் செய்தார். தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் ஸ்னிக்கர் சார்வாரியா முன் விசாரணைக்கு வந்தது. இதனை அவர் மாஜிஸ்திரேட் கபில் குப்தாவிடம் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து அடுத்த மாதம் 21ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விசாரணைக்கு நோரா ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.