ஹவாய்: ஃபீனிக்ஸில் இருந்து பறந்து சென்ற விமானம் நடுவானில் குலுங்கியதால் பயணிகள் பீதியடைந்தனர். இருந்தும் விமானத்தில் இருந்த 13 பயணிகள் மற்றும் மூன்று பணியாளர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஹவாய் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஃபீனிக்ஸில் இருந்து புறப்பட்ட ஹவாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் 278 பயணிகள் மற்றும் 10 பணியாளர்கள் பயணம் செய்தனர். ஹவாய் நோக்கி அந்த விமானம் சென்று ெகாண்டிருந்த போது, திடீரென விமானம் குலுங்கியதால், விமானத்தில் இருந்த 13 பயணிகள் மற்றும் மூன்று பணியாளர்களுக்கு காயம் ஏற்பட்டது.
அதையடுத்து அந்த விமானம் ஹொனலுலுவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. பயணிகளில் பலருக்கு தலையில் பலத்த காயமும், சிராய்ப்பும் ஏற்பட்டது. சிலர் சுயநினைவை இழந்து அலறினர். தற்போது அனைவரும் நலமுடன் உள்ளனர். காயமடைந்தவர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர். நடுவானில் விமானம் குலுங்கியது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹொனலுவில் உள்ள தேசிய வானிலை சேவையின் வானிலை ஆய்வாளர் தாமஸ் வாகன் கூறுகையில், ‘விமானப் பாதையை உள்ளடக்கிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கான வானிலை ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்தன. அதனால், விமானம் பறப்பதில் பிரச்னை இருந்திருக்கலாம்’ என்றார்.