அணைக்கட்டு : ஊசூர் அருகே காட்டு பகுதியில் 1400 லிட்டர் கள்ள சாராயம், ஊறலை போலீசார் அழித்தனர்.வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட அல்லேரி, குருமலை மலை பகுதிகளில் கள்ள சாராயம் காய்ச்சி விற்கப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் வேலூர் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் உத்தரவின்படி டிஎஸ்பி திருநாவுக்கரசு, அரியூர் காவல்நிலைய பொறுப்பு பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் அரியூர் போலீசார் கொண்ட குழுவினர் அல்லேரி, குருமலை மலை பகுதியில் சாராய
தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது நடுகாட்டு பகுதியில் சாராயம் காய்ச்சி கொண்டிருந்த ஒரு கும்பல் போலீசார் வருவதை கண்டு காட்டு பகுதிக்குள் ஓடி தலைமறைவாகி உள்ளார். இதையடுத்து டிஎஸ்பி தலைமையில் அங்கு சென்ற போலீசார் அவர்கள் விற்பனைக்காக லாரி டியூப்களில் அடைத்து பதுக்கி வைத்திருந்த 400 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி அழித்தனர்.
மேலும் மினிடேங்கில் பதுக்கி வைத்திருந்த ஆயிரம் சாராய ஊறலையும் அழித்து, காய்ச்சுவதற்கு பயன்படுத்திய பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தி அழித்தனர். தொடர்ந்து அருகில் வசித்த மலைவாழ் மக்களிடம் தப்பி ஓடி தலைமறைவான சாராயம் காயச்சிய நபர்கள் யார் என தெரியுமா என கேட்டறிந்து கள்ள சாராயத்தின் தீமைகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி சாராயம் காய்ச்சுவது, விற்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுகொண்டனர். தொடர்ந்து தப்பி ஓடிய சாராய காய்ச்சிய நபர்கள் யார் என அரியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.