பாட்னா: சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவிற்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரே காரணம் என ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியில், ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரர் பராஸ் தலைமையில் ஒரு பிரிவினர் தனியாக செயல்பட தொடங்கியதால் பிளவு ஏற்பட்டது. இதற்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தான் காரணம் என சிராக் பஸ்வான் குற்றம்சாட்டினார். இதனிடையே பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், லோக் ஜனசக்தி கட்சியில் பிளவு ஏற்பட நிதிஷ்குமாரே நேரடி காரணம் என்றும் இது அனைவருக்கும் தெரியும் என்றும் கூறினார். 2005, 2010 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் லோக் ஜனசக்தியை உடைக்க நிதிஷ்குமார் முயற்சித்ததாகவும் தேஜஸ்வி புகார் கூறினார். சிராக் பஸ்வான் தனது அரசியல் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க இதுவே சரியான நேரம் என்றும் குழப்பவாதிகளை விட்டு விலக வேண்டும் என்றும் தேஜஸ்வி யாதவ் அறிவுறுத்தினார்.