சென்னை: சென்னையில் பிரபல ரவுடி நடுரோட்டில் ஓடஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மனைவியின் கண்முன்னே இந்த பயங்கர செயல் நடந்திருக்கிறது. சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் கருக்கா சுரேஷ்(45), இவர் பிரபல ரவுடியாக இருந்தவர்.
இவர் மீது புளியந்தோப்பு, வியாசர்பாடி, எம்கேபி நகர் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளது. சுரேஷின் மனைவி விமலா துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
விமலா துப்புரவு பணியில் ஈடுபட்டு இருந்து கொண்டிருந்தபோது மனைவியை பார்த்து பேசுவதற்காக சென்றிருக்கிறார். அப்போது இருவரும் சாலையில் பேசிக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆய்தங்களுடன் வந்து இறங்கியுள்ளது.
தன்னை நோக்கி வந்தததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் நிலைமையை புரிந்து கொண்டு தப்பிக்க முயற்சித்து ஓடி இருக்கிறார். ஆனால் அந்த கும்பல் ஓடஓட விரட்டி சுரேஷ் படுகொலை செய்துள்ளது. பட்டப்பகலில் சென்னையில் நடுரோட்டில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் தெரிந்ததும் போலீசார் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொடுத்தல் வாங்கலில் தகராறு ஏற்பட்டு இந்த கொலை நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.