தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டையில் நன்னடத்தை விதிமீறிய பிரபல ரவுடிக்கு 247 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டை, ஜே.ஜே.நகர் 1வது தெருவை சேர்ந்தவர் பிரவீன் (25). பிரபல ரவுடியான இவர் மீது ஏற்கனவே 2 கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகள் காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம்தேதி வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளரிடம், தான் திருந்தி வாழப்போவதாகவும், ஒருவருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும் நன்னடத்தை உறுதிமொழி பத்திரத்தை பிரவீன் எழுதிகொடுத்துள்ளார். ஆனால் கடந்த நவம்பர் மாதம் 28ம்தேதி ஆர்.கே.நகர் பகுதியில் கூட்டு கொள்ளையில் ஈடுபட்ட பிரவீனை ஆர்.கே.நகர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து, வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் பவன்குமார் ரெட்டி, நன்னடத்தை விதிமீறிய குற்றத்திற்காக 247 நாட்கள் பிணையில் வரமுடியாத வகையில் பிரவீனுக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று பிரவீன் சிறையில் அடைக்கப்பட்டார்.