ஈரோடு: ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் தொற்றால் உயிரிழப்பதாக புகார் எழுந்த நிலையில் ஸ்கேன் இயந்திரத்திற்கு சீல் வைக்கப்பட்டது. ஈரோடு பன்னிர்செல்வம் பூங்காவில் தனியார் மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் மகப்பேறு மற்றும் பெண்கள் சிறப்பு மருத்துவராகவும், உரிமையாளராகவும் கோகிலா சேகர் என்பவர் உள்ளார். இங்கு பிறக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்தது. ஆஸ்பத்திரியில் போதிய சுகாதார மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது.
இதனை அடுத்து மருத்துவ கண்காணிப்பு குழு நடத்திய ஆய்வில் புகார் உண்மை என்பது தெரியவந்தது. அறிவுறுத்தலுக்கு பிறகும் தவறை சரிசெய்யாமல் இருந்ததால் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பிரேமகுமாரி தலைமையிலான அதிகாரிகள் ஸ்கேன் இயந்திரத்தின் உரிமத்தை ரத்து செய்து இயந்திரத்திற்கு சீல் வைத்தனர். இதைத்தொடர்ந்து அவர், கண்காணிப்பு குழு ஒன்றை அமைத்து கோகிலா சேகர் நர்சிங் ஹோம் ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட சுகாதாரப்பிரிவின் மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சம்மந்தபட்ட மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபோது பிரசவத்தின் பெண்களுக்கு பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகள் உள்ளிட்டவை காலவதியானவற்றை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் இயந்திரத்திற்கு சீல் வைக்கப்பட்டது.