புதுடெல்லி: ‘மாநிலங்களவையில் எம்பிக்கள் ஆதாரமற்ற கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது. அது உரிமை மீறலுக்கு சமமாகும்’ என அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் எச்சரித்துள்ளார். மாநிலங்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தில் பேசிய ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், ‘‘எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து புலனாய்வு அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது. கடந்த 8 ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது அமலாக்கத்துறை 3,000 சோதனைகளை நடத்தி உள்ளது. அதில் 23 பேரை மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர்’’ என்றார். இதற்கு ஆளுங்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார். அப்போது குறுக்கிட்ட அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர், ‘‘அவையில் பேசப்படும் எந்த ஒரு கருத்துகளும் துல்லியமாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும். செய்தித்தாள் அறிக்கை அல்லது யாரோ ஒருவர் கூறிய கருத்துக்கள் இங்கு எந்த விளைவையும் ஏற்படுத்தாது. எந்தவொரு உறுப்பினரும் ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிடுவது அவையின் உரிமை மீறலுக்கு சமமாகும். இதை அனுமதிக்க முடியாது.சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களை கொண்டு அவையில் குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும்’’ என்றார்.