வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி Ms.International World Peoples Choice Winner 2022 என்ற பட்டம் வென்று அசத்தியுள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்க-இந்திய கூட்டு முயற்சியால் நடைபெற்ற ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ அழகிப் போட்டியில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்றார். மொத்தமாக 3,000 பேர் பங்கேற்ற போட்டியில் இறுதியாக 52 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
அதில், தமிழகத்தில் இருந்து தேர்வானது பிளாரன்ஸ் ஹெலன் நளினி மட்டுமே. மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2021-ம் ஆண்டுக்கான ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ பட்டத்தை பிளாரன்ஸ் ஹெலன் நளினி வென்றார். அதேபோல், ‘கிளாமரஸ் அச்சீவர்’ என்ற துணைப் பிரிவிலும் பட்டத்தை வென்று அசத்தினார்.
இதோடு பிளாரன்ஸ் ஹெலன் நளினியின் வெற்றி நின்று விடவில்லை. தனது திறமையை உலமே அறிந்திட கடல் கடந்து பயணித்தார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெற்ற திருமதி உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்றார். கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற போட்டியில் பிளாரன்ஸ் ஹெலன் நளினிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக செயல்பட்ட பிளாரன்ஸ் ஹெலன் நளினி Miss International world peoples Choice winner 2022 என்ற பட்டத்தை வென்றுள்ளார். 14 வயது முதல் 60 வயது வரையிலான போட்டியாளர்களிடையே நடைபெற்ற போட்டியில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி முதலிடம் பிடித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் அடுத்த முறை நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பிளாரன்ஸ் ஹெலன் நளினிக்கு கிடைத்துள்ளது.