புதுடெல்லி: ‘ரஷ்யாவின் கச்சா எண்ணெக்கு ஜி7 நாடுகள் விதித்த விலை உச்ச வரம்புக்கு ஆதரவில்லை’ என இந்தியா அறிவித்துள்ளது. உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ரஷ்யாவின் பொருளாதாரத்தில் அதன் கச்சா எண்ணெய் விற்பனை முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க, ரஷ்ய கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 60 டாலர்கள் விலையை ஜி7 நாடுகள் சமீபத்தில் நிர்ணயித்தன. இதனை ஐரோப்பிய யூனியனும் ஏற்றுக் கொண்டது. இந்த விலையில் மட்டுமே எந்த நாடும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டுமென உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த உத்தரவுக்கு இந்தியா ஆதரவளிக்காது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக மாஸ்கோவில் ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பவன் கபூர், ரஷ்ய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவக்கை சந்தித்து பேசினார். இதன் பின்னர் டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ரஷ்ய எண்ணெய்க்கு ஜி7 நாடுகள் விதித்த விலை உச்சவரம்புக்கு ஆதரவு இல்லை என்ற இந்தியாவின் முடிவை துணை பிரதமர் வரவேற்றுள்ளார். இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு தொடர்ந்து எண்ணெய் சப்ளை செய்வதில் முழு ஆதரவு தருவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார். நடப்பு ஆண்டின் முதல் 8 மாதங்களில் ரஷ்யாவிடம் இருந்து, இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி 163.5 லட்சம் டன்களாக உள்ளது. இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் ரஷ்யா 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது’ என கூறப்பட்டுள்ளது.