வாஷிங்டன்: வடகொரிய அரசுடன் வர்த்தக ரீதியாக ஒப்பந்தம் செய்து கொண்ட இந்தியர் உட்பட 2 நபர்கள் மற்றும் 7 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. எஸ்இகே ஸ்டூடியோ எனும் அனிமேஷன் ஸ்டூடியோ நிறுவனம் வடகொரியா அரசுக்கு சொந்தமானது. இந்நிறுவனம் மீது கடந்த ஆண்டு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இந்நிலையில், எஸ்இகே நிறுவனத்திற்கு வர்த்தக உறவு கொண்டதற்காக இந்தியர் உட்பட 2 நபர்கள் மற்றும் 7 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி நேற்று முன்தினம் இதற்கான அறிவிப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை பிறப்பித்தது.
அதன்படி, சிங்கப்பூரில் செயல்படும் பன்சாகா தனியார் நிறுவனத்தின் இயக்குநரான இந்தியாவைச் சேர்ந்த தீபக் சுபாஷ் ஜாதவ் மற்றும் பிரான்சை சேர்ந்த கிம் மியோங் சோல் ஆகியோர் மீதும், சீனா, ரஷ்யா, சிங்கப்பூர், ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த 7 நிறுவனங்கள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பன்சாகா நிறுவனம் அனிமேஷன் புராஜெக்டுக்காக எஸ்இகே நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதுதொடர்பாக தீபக் சுபாஷ் ஜாதவ், எஸ்இகே நிறுவனத்துடன் பண பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ளார்.