சென்னை : சென்னை திருவெற்றியூரில் ஆண்டுக்கு ஒருமுறை கவசமின்றி காட்சியளிக்கும் ஆதிபுரீஸ்வரரை காண கொட்டும் மழையில் திரண்ட பக்தர்கள் குடைபிடித்தபடி வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவெற்றியூர் தியாகராஜர் சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் புற்று வடிவில் உள்ள மூலர் ஆதிபுரீஸ்வரர் நாக கவசத்துடன் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஆதிபுரீஸ்வரரின் நாக கவசம் திறக்கும் விழா நடைபெறும்.
வாசுகி என்ற பாம்பிற்கு காட்சி கொடுப்பதற்காக சுயம்பு புற்று வடிவில் தோன்றிய ஆதிபுரீஸ்வரருக்கு அன்றைய தினம் தைலாபிஷேகம் நடத்தப்படும். கார்த்திகை மாதம் பௌவுர்ணமி நாளில் இருந்து 3 நாட்களுக்கு மட்டும் தங்கக்கவசமின்றி ஆதிபுரீஸ்வரர் காட்சியளிப்பார். அதன்படி நேற்று ஆதிபுரீஸ்வரர் மீது சாத்தப்பட்டிருக்கும் கவசம் திறக்கப்பட்டு மகாபிஷேகம் மற்றும் புனுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடைபெற்றது. 2-ம் நாளான இன்று சாரல் மலையையும் பொருட்படுத்தாது குடை பிடித்தப்படி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.