சென்னை: போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கிய ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ ஆகிய படங்களில் அஜித் குமார் நடித்திருந்தார். தற்போது அவர்கள் 3வது முறையாக இணைந்துள்ள ‘துணிவு’ படம், வரும் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வருகிறது. இதில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ளனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். பஞ்சாப்பில் நடந்த வங்கி கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படம் குறித்து ஹெச்.வினோத் கூறியதாவது: வங்கி செட்டுகளைப் பயன்படுத்தியதால், இது வங்கி கொள்ளை சம்பந்தப்பட்ட படம் என்று சொல்கிறார்கள்.
ஆனால், இப்படம் ஒரு மல்டி ஜானர் படம். ஒரு ஜானரில் இதை அடைத்துவிட முடியாது. இது பணத்தைப் பற்றிய படமாக இருக்கும். சுருக்கமாகச் சொன்னால், ‘துணிவு’ அயோக்கியர்களின் ஆட்டம் என்று சொல்லலாம். அஜித் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறாரா என்று கேட்கிறார்கள். படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து விஷயங்களும் இடம்பெற்றுள்ளது. அஜித்துக்கு இரட்டை வேடமா என்பது சஸ்பென்ஸ். படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரைப் பார்த்துவிட்டு படத்துக்கு வருவது நல்லது.