×

கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்ததால் பெரியமேடு அல்லிக்குளம் வளாகத்தில் இரும்பு வியாபாரி ஓட ஓட வெட்டி படுகாலை

சென்னை: கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்ததால், பெரியமேடு அல்லிக்குளம் வளாகத்தில் இரும்பு வியாபாரி ஒருவரை ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலை செய்துவிட்டு ஆட்டோவில் தப்பி சென்ற 5 ரவுடிகளை திருவள்ளூர் அருகே போலீசார் கைது செய்தனர்.

சென்னை புளியந்தோப்பு ஏ.எம்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி(37). இவர் பெரியமேடு அல்லிக்குளம் பஜாரில் பழைய இரும்பு விற்பனை கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். முனுசாமி மற்றும் அவரது மாமியார் கடைகள் முன்பு வியாசர்பாடி எம்ஆர்.நகரை சேர்ந்த கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்கில் தொடர்புள்ள மணிகண்டன்(எ)புளிமூட்டை மணி(27) என்பவர் செல்போன் உதிரி பாகங்கள் கடை போட்டுள்ளார். இதனால் முனுசாமிக்கும் ரவுடியான மணிகண்டனுக்கும் இடையே கடந்த வாரம் தகராறு ஏற்பட்டது. அதேநேரம், மணிகண்டன் தனது கடையில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முனுசாமி பெரியமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. அதன்படி போலீசார் மணிகண்டனை அழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

போலீசாருக்கு கஞ்சா விற்பனை குறித்து எப்படி தகவல் தெரியும் என்று மணிகண்டன் தனது தொழில் கூட்டாளிகளான கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த அஷ்ரப் அலி(28), புளியந்தோப்பு கே.பார்க் பகுதியை சேர்ந்த அப்பாஸ்(28), அப்பி(எ)ஆப்பிரகாம்(20), கிஷோர்(27) ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது தான் கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் இரும்பு வியாபாரி முனுசாமி கொடுத்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த ரவுடி மணிகண்டன் இரும்பு வியாபாரி முனுசாமியை கொலை செய்ய நண்பர்களுடன் முடிவு செய்தார்.

அதன்படி நேற்று இரவு ரவுடி மணிகண்டன் தனது நண்பர்கள் 4 பேருடன் மது அருந்திவிட்டு முனுசாமியை கொலை செய்ய கத்திகளுடன் அல்லிக்குளம் பஜாருக்கு வந்துள்ளார். அப்போது முனுசாமி தனது இரும்பு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு செல்ல வெளியே வந்தார். அப்போது ரவுடி மணிகண்டன் தனது நண்பர்களுடன் முனுசாமியை சுற்றி வளைத்து வெட்டினர். இதை சற்றும் எதிர்பார்க்காத முனுசாமி அல்லிக்குளம் வளாகத்திற்குள் தப்பி ஓடினார். ஆனால் விடாமல் மணிகண்டன் தனது நண்பர்களுடன் ஓட ஓட முனுசாமியை வெட்டி படுகொலை செய்தனர். பிறகு அனைவரும் ஒரு ஆட்டோ மூலம் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரியமேடு போலீசார் அல்லிக்குளம் வளாகத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட இரும்பு வியாபாரி முனுசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரவுடி மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையே நேற்று இரவு திருவள்ளூர் மாவட்ட நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பத்ம பபி மற்றும் எஸ்ஐ சுரேஷ் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வேகமாக வந்த ஆட்டோவை போலீசார் வழிமறித்த போது, ஆட்டோவில் இருந்த ஒருவர் தப்பி ஓடினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவில் மது போதையில் ரத்தக்கரைகளுடன் இருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அல்லிக்குளம் வளாகத்தில் இரும்பு வியாபாரி முனுசாமியை கொலை செய்துவிட்டு திருவள்ளூரில் உள்ள வழக்கறிஞர் ஒருவரை பார்க்க ஆட்டோவில் வந்தது தெரியவந்தது.

உடனே போலீசார் ரவுடி மணிகண்டன்(எ) புளிமூட்டை மணி 4 பேரையும் பிடித்து மெரியமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி பெரியமேடு போலீசார் மணிகண்டன், அப்பாஸ், அஷ்ரப் அலி, ஆபிரகாம் ஆகியோரை கைது செய்தனர். மேலும், ஆட்டோவில் இருந்து தப்பி ஓடிய கிஷோரை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கத்திகள் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Periyamedu ,Allikulam , An ironmonger was hacked to death in Periyamedu's Allikulam complex for tipping off the police about the sale of ganja.
× RELATED 35 பேர் குண்டாசில் கைது