ஐதராபாத்: டெல்லி அரசின் புதிய கலால் கொள்கை ஊழல் தொடர்பாக தெலங்கானா முதல்வரின் மகளும், டிஆர்எஸ் கட்சியின் எம்எல்சியுமான கவிதாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய கலால் கொள்கையில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது. இந்த வழக்கில், தெலங்கானா முதல்வரின் மகளும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் எம்எல்சியுமான கே.கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்தி ரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிபிஐ விசாரணை வளையத்திற்குள் கவிதா கொண்டு வரப்பட்டார்.
இந்நிலையில், கவிதாவுக்கு சிபிஐ நேற்று சம்மன் அனுப்பியது. அதில் வரும் 6ம் தேதி காலை 11 மணிக்கு ஏதேனும் ஓர் விருப்பமான இடத்தில் நேரில் ஆஜராக சிபிஐ உத்தரவிட்டுள்ளது. இதற்கு தனது ஐதராபாத் இல்லத்தில் விசாரணைக்கு ஆஜராவதாக கவிதா தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேசிய அளவில் பாஜவுக்கு எதிராக டிஆர்எஸ் கட்சியை வலுப்படுத்த முயலும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சமீபகாலமாக பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் அவரது மகளுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.