சென்னை: திமுக மாணவர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். அணியின் தலைவர் இரா.ராஜீவ்காந்தி, இணை செயலாளர்கள் பூவை சி.ஜெரால்டு, எஸ்.மோகன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அணியின் துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி.கோகுல், பூர்ண சங்கீதா, ஜெ.வீரமணி பங்கேற்றனர். ”திமுக மாணவர் அணிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்த திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.
பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்குகள் - கட்டுரைப் போட்டி-பேச்சுப் போட்டி நடத்தி கொண்டாட வேண்டும், மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில், திமுக பணியில் திறம்பட செயல்படுவோம், திராவிட இயக்க சிந்தனைகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற வட்டங்கள் தோறும் மாணவர் அணிக்கு நிர்வாகிகளை நியமிக்க உத்தரவு வழங்கிட்ட, தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, மாவட்ட அளவிலான அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் நியமனம் செய்யவும், அதையொட்டி மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் உள்ள மாணவர்களை, உறுப்பினர்களாக சேர்த்து, திமுக மாணவர் அணியின் அமைப்புகளை கட்டமைக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது. மேலும், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.